தீவன ஆலைக்கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பதாக புகார் : பொதுமக்கள் போராட்டம்..!
எருமப்பட்டி அருகே தீவன ஆலைக்கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
நாமக்கல்:
எருமப்பட்டி அருகே தனியார் தீவன ஆலைக்கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார் எழுப்பி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காவக்காரன்பட்டி கிராமத்தில் தனியார் கால்நடை தீவன தயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் எழுப்பி வருகின்றனர்.
அப்பகுதியில் தண்ணீரை பயன்படுத்தும் பொது மக்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், இது குறித்து அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், நேற்று தனியார் தீவன தயாரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் காவக்காரன்பட்டி செங்குட்டை பகுதியில், ரோட்டில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் நாமக்கல் போலீஸ் டிஎஸ்பி தனராசு தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிக்கை வரும் வரை ஆலையை இயக்கக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வலியுறுத்தினர்.
கிராம மக்கள் கோரிக்கைகள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.