நாமக்கல்லில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 4 பேர் கைது
நாமக்கல் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்தவர் ஞானவேல் (30). லாரி டிரைவர். இவர் கடந்த 8-ந் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் அங்குள்ள 1வது தெருவில் தனது டூ வீலரை நிறுத்தி விட்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த லக்கம்பாளையம், காந்திநகர் பகுதியை சேர்ந்த சந்துரு (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் டூ வீலர் டேங்க் கவரில் இருந்த செல்போன், டிரைவிங் லைசென்ஸ் மற்றும் பணம் ரூ.450ஐ திருடிக் கொண்டு தப்பிச்சென்றனர். ஞானவேல் மற்றும் அவரது நண்பர்கள் அவர்களை விரட்டிப் பிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கிருந்து சிறிது தூரத்தில் டூவீலருடன் நின்று கொண்டிருந்த லட்சுமி நகர் அஜய் (22), காந்திநகர் ஜெகதீஸ்வரன் (19) ஆகியோரையும் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் பிடிபட்ட 4 பேரையும் நாமக்கல் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 மொபட்டுகள், 2 வெள்ளிக் கொடி, தங்க பொட்டு தாலி, செல்போன் உள்பட ரூ.26 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுசம்மந்தமாக 17 வயது சிறுவன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் ஏற்கனவே நாமக்கல் பகுதியில் பல இடங்களில் திருடியுள்ளது தெரிய வந்துள்ளது.