/* */

ஆசிரமத்திலிருந்து பெண் மீட்பு: நித்தியானந்தா பெண் சீடர்கள் உட்பட 5 பேர் கைது

இராசிபுரம் அருகே பெண்ணை மீட்ட சம்பவம் தொடர்பாக நித்தியானந்தாவின் சீடர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஆசிரமத்திலிருந்து பெண் மீட்பு: நித்தியானந்தா பெண் சீடர்கள் உட்பட 5 பேர் கைது
X

இராசிபுரம் அருகே ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக நித்தியானந்தா சீடர்கள் 3 பேரை நாமகிரிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியில் வசிப்பவர் ராமசாமி (62), விவசாயி, அதே பகுதியில் மளிகை கடையும் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அத்தாயி (52). நித்தியானந்தாவின் தீவிர பக்தையான அத்தாயி, கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்துக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டார்.

அங்கு தனது பெயரை மரூபானந்தசாமி என்று மாற்றிக்கொண்டார். மீண்டும் வீட்டுக்கு திரும்பிவர நினைத்த அவரை அங்கிருந்தவர்கள் வெளியேவிட அனுமதிக்கவில்லை. அதனால் தன்னை திருப்பி அழைத்துச் செல்லுமாறு கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் அத்தாயி கூறியுள்ளார்.

இந்த நிலையில் அத்தாயி பெயரில் வாங்கிய கடனுக்காக அவரது வீட்டை ஜப்தி செய்யப்பபோவதாக வங்கி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இதையறிந்த அத்தாயி கடந்த 6-ந் தேதி சொந்த ஊருக்கு காரில் வந்தார். அவருடன் நித்யானந்தாவின் பெண் சீடர்களான அகிலா ராணி என்கிற மாநித்திய ஜோதிகானந்தசாமி (33), சத்யா என்கிற மாசர்வானந்தசாமி (41) மற்றும் ஆசிரமத்தில் பணியாற்றும் ஜெய கிருஷ்ணா (39) ஆகியோரும் காரில் உடன் வந்தனர்.

அய்யம்பாளையம் கிராமத்திற்கு நித்தயானந்தா சீடர்கள் வந்த காரை, அத்தாயியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அத்தாயியை இறக்கிவிட்டு செல்லுமாறு கூறினர். இதனால் நித்யானந்தாவின் பெண் சீடர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து உறவினர்கள் அத்தாயியை மீட்டு வேறு காரில் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். தகராறு ஏற்பட்டதால் நித்யானந்த சீடர்கள் 3 பேரும் காரில் ஏறி தப்பினர். இந்தநிலையில் நித்யானந்தாவின் பெண் சீடர்களான அகிலா ராணி நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தங்களை அத்தாயியின் கணவர் ராமசாமி (62), மகன் பழனிசாமி (30), மருமகள் பேபி மற்றும் அடையாளம் தெரியாத 60 பேர் அவரை தாக்கிவிட்டு கடத்திச் சென்று விட்டதாக கூறியிருந்தார்.

இதனிடையே அத்தாயியின் கணவர் ராமசாமி, தனது மனைவியை பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தில் சிறை வைத்ததாகவும், அவரை வெளியே விடாமல் கொடுமைப்படுத்தியதாகவும், வங்கிக்கு கையெழுத்து போட வந்தபோது தங்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகவும் போலீசில் புகார் அளித்தார். இருதரப்பை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின்பேரில் ராசிபுரம் டிஎஸ்பி., செந்தில்குமார், நாமகிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொ) சிவசங்கரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பில்ராஜ், செங்கோடன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில் நித்யானந்தாவின் பெண் சீடர்களான அகிலா ராணி, சத்யா மற்றும் ஜெயகிருஷ்ணா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் நித்யானந்தா பெண் சீடர்கள் கொடுத்த புகாரின் பேரில் அத்தாயியின் கணவர் ராமசாமி மற்றும் மகன் பழனிசாமியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் இராசிபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 11 Sep 2021 3:18 AM GMT

Related News