பயிர்கடன்களுக்கு சிபில் ஸ்கோரில் இருந்து விலக்கு அளிக்க கோரி விவசாய சங்கத்தினர் மனு
விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் கடன்களுக்கு சிபில் ஸ்கோரில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழகத்தினர் வேண்டுகோள்.
HIGHLIGHTS
இதுகுறித்து விவசாயிகள் முன்னேற்றக்கழ மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தராமனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுகிறது. அதில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கார்ப்பரேட் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்தும், அடங்கல், கம்ப்யூட்டர் சிட்டா பெற்றுக் கொண்டு, ரூ. 1.60 லட்சம் பயிர்கடன், ரூ. 1.40 லட்சம் அடமான கடன் என, மொத்தம், ரூ. 3 லட்சம் மட்டுமே விவசாதய கடன் வழங்கப்படுகிறது.
சராசரியாக, இரண்டரை ஏக்கர் நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும், இந்த நடைமுறை பொருந்தும். ஆனால், 5, 10 ஏக்கர், அதற்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும், இதே அளவுதான் பயிர் கடன் வழங்கப்படுகிறது.
விவசாய நிலப்பரப்பளவு அதிகமாகும்போது, பயிர் சாகுபடி செய்ய அதிகப்படியான முதலீடு தேவைப்படுகிறது. ஆனால், வங்கிகள் எவ்வளவு நிலம் வைத்திருந்தாலும், ரூ. 3 லட்சத்திற்கு மேல் விவசாய கடன் வழங்குவதில்லை. அவற்றை தவிர்த்து, எவ்வளவு ஏக்கர் நிலத்தில் பயிர் செய்கிறார்களோ, அதற்கு ஏற்றார் போல், அனைத்து வங்கிகளும் விவசாய கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த காலதாமதம் ஆகும்போது, வங்கிகளில் சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும். அதைக் காரணமாகக் கொண்டு, விவசாயிகளுக்கு கடன் கொடுக்காமல், வங்கிகள் தொடர்ந்து புறக்கணிப்பு செய்கிறது. இந்த சிபில் ஸ்கோரைக் காரணம் காட்டி, கடன் வழங்காததால், விவசாயிகள் தொடர்ந்து சாகுபடி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால், உணவு உற்பத்தியில் பெருமளவு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து பொதுத்துறை, தனியார் துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்கடன்களுக்கு, சிபில் ஸ்கோரில் விலக்கு அளிக்க, தகுந்த பரிந்துரை செய்யவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.