தமிழ் வழி சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம்: கல்லூரி மாணவிகள் சாலை மறியல்
தமிழ் வழி சான்று வழங்க காலதாமதம் செய்ததால் பொறுமையிழந்த, நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி முன்னாள் மாணவியர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு, கடந்த பிப்ரவரி மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் (டிஆர்பி) நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 1ம் வகுப்பு முதல் கல்லூரி வரை தமிழ் வழியில் படித்திருந்தால் அவர்களுக்கு 20 சதவீதம் வரை முன்னுரிமை வழங்கப்படும்.
இதற்கான தமிழ் வழி கல்விச் சான்றை வரும் 25 ம் தேதிக்குள் டிஆர்பி வெப்சைட்டில் அப்லோட் செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவியர் நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் கேட்டு கல்லூரிக்கு வந்திருந்தனர்.
கல்லூரிவளாகத்தில், பல மணி நேர காத்திருப்புக்குப் பின்னரும் தமிழ் வழி சான்று வழங்கப்படவில்லை. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டும் உரிய பதில் அளிக்கவில்லை. பொறுமையிழந்த முன்னாள் மாணவியர் முதல்வர் அறையை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து கல்லூரி எதிரே நாமக்கல் - திருச்சி மெயின் ரோட்டின் குறுக்கே அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த நாமக்கல் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து முன்னாள் மாணவியர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.