நாமக்கல்: தை அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் பக்தர்கள் கூட்டம்
தை அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் பகுதி கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
HIGHLIGHTS
உத்தராயண காலம் ஆரம்பிக்கக்கூடிய தை அமாவாசை தினத்தில், முன்னோர்களை வணங்கி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக விரதமிருந்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அமாவாசை தினத்தில் ஒரு செயலை தொடங்கினால், நாம் செய்யும் செயல் முன்னேற்றம் தந்து வெற்றியைத் தரும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் 12 அமாவாசை வந்தாலும், ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை எனும் புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமாக விரதம் கடைப்பிடிப்பது வழக்கம்.
ஒருவர் தன் பெற்றோருக்கும், தன் முன்னோர்கள், குல தெய்வத்தையும் வணங்காவிட்டால், அவர்கள் மற்ற தெய்வங்களை வணங்கி பயனில்லை. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த முன்னோர்களை தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டிய முக்கிய திதி தான் அமாவாசை. பெற்றோரை இழந்தவர்கள் தை, ஆடி, மகாளய அமாவாசை தினத்தில் விரதமிருந்து தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது அவசியம்.
தற்போது கொரோன ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால் தை அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ நரசிம்மர் கோயில், ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில், பலபட்டரை மாரியம்மன் கோயில், வள்ளிபுரம் ஈஸ்வரன் கோயில், புத்தூர் ஈஸ்வரன் கோயில், ப.வேலூர் ஈஸ்வரன் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயில் அருகில் திரளான பொதுமக்கள் காவிரியில் நீராடி காவிரிக்கரையில் முன்னோர்களுக்க தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.