கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் மோசடி: கிரிமினல் நடவடிக்கை எடுக்க எம்.பி கோரிக்கை
ஆரியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர்கடன் மோசடி செய்த, அதிமுக தலைவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜ்சயபா எம்.பி. ராஜேஷ்குமார் கூறியுள்ளார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், ஆரியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், வெளிநாட்டில் வசிக்கும் தனது தம்பி பெயரில் பயிர்கடன் வாங்கி தள்ளுபடி பெற்று மோசடி செய்த, அதிமுக தலைவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜ்சயபா எம்.பி. ராஜேஷ்குமார் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி. இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்ற அதிமுக ஆட்சியில், கூட்டுறவு நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் உள்ள ஆரியூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக, மோகனூர் ஒன்றிய அதிமுக அவைத்தலைவர் மணி என்பவர் செயல்பட்டு வருறார். இவரது தம்பி சுப்பிரமணி என்பவர் பல ஆண்டுகளாக இங்கிலாந்தில் பணிபுரிந்து வருகிறார்.
ஆரியூர் கூட்டுறவு சங்க தலைவர் மணி, கடந்த 2019ம் ஆண்டு, தனது தம்பி சுப்பிரமணி என்பவரின் நில சிட்டா அடங்கல் நகலைக் கொடுத்து, அவரைப்போன்று போலியாக கையொப்பமிட்டு கூட்டுறவு சங்கத்தில் வட்டியில்லா பயிர் கடன் ரூ.1.20 லட்சம் பெற்றுள்ளார். பின்னர் 2020ம் ஆண்டில் அவரது தம்பி பெயரில் ரூ. 1.60 லட்சம் பயிர் கடன் பெற்று, அரசு உத்திரவின்படி தள்ளுபடி பெற்றுள்ளார். தற்போது இது குறித்து தகவல் வெளியே தெரிந்ததால், அந்த கடனை கட்ட முயன்றுள்ளார்.
இது குறித்து திமுக சார்பில், நாமக்கல் மண்டல கூட்டுறவு இணை பதிவாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதிகாரிகள் இது சம்மந்தமாக விசாரணை செய்ததில், வெளிநாட்டில் வசிப்பவர் பெயரில், பயிர் கடன் வாங்கி, தள்ளுபடி பெற்று முறைகேடு செய்தது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதில் சம்மந்தப்பட்ட சங்க தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது விதிமீறல் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஏற்கனவே, போலி நகையை அடகு வைத்து கடன் தள்ளுபடி பெற்றதும் வெளியானது. எனவே மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும், பயிர்கடன், நகைக்கடன் வழங்கியதில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து கூட்டுறவுத் துறையினர் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கூறினார்.