நாமக்கல் அருகே குடிசை வீட்டில் தீ விபத்து: ரூ. 10 லட்சம் பொருட்கள் சேதம்
வேலகவுண்டம்பட்டி அருகே மின்கசிவால் குடிசை வீட்டில் தீப்பிடித்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பிராந்தகம் தம்மநாயக்கம்பட்டியை சேர்ந்தவர் சென்னப்பன். இவருடைய மகன் குமார் (33), லாரி டிரைவர். குமார் தற்போது புதிய வீடு கட்டி வருவதால் தற்காலிகமாக அதற்கு அருகில் குடிசை அமைத்து குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று குமார், புதிய வீட்டுக்கு தேவையான கட்டுமான பொருட்கள் வாங்குவதற்காக வெளியில் சென்று இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது மகன் குடிசை வீட்டில் இருந்து புகை வருவதாக கூறி அவருக்கு போன் செய்துள்ளார். இதனையடுத்து வெளியில் சென்றிருந்த குமார் அதிர்ச்சியடைந்து வீட்டிற்கு வந்தார்.
இதனிடையே தீ விபத்து ஏற்பட்டதைக் கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயைக் கட்டுப்படுத்தி, மேலும் பரவாமல் அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில், குடிசை வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
இதில் குமார் வீடு கட்டுவதற்காக வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம், 12 பவுன் நகை, வீட்டு பத்திரம், வெள்ளிப்பொருட்கள், துணிமணிகள், மளிகை சாமான்கள் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. மின்கசிவு காரணமாக குடிசையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.