மிஸ் பண்ணாதிங்க: நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 19ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது; அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 14,64,300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி (83.16) சதவீதம்) 12,17,781 நபர்களுக்கும் (முதல் தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் 2,46,519), இரண்டாம் தவணை தடுப்பூசி (56.55சதவீதம்) 8,28,116 நபர்களுக்கும் (இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் 2,67,854) செலுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை நடந்த 18 மாபெரும் தடுப்பூசி முகாம்களில், 6,99,772 பேர் தடுப்பூசி செலுத்தி பயன் பெற்றனர். இன்று 22ம் தேதி சனிக்கிழமை, 19ம் கட்டமாக அனைத்து கிராம பஞ்சாயத்துக்கள், டவுன் பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 456 நிலையானமுகாம்கள்மூலமாகவும் 34 நடமாடும் குழுக்கள் மூலமாகம், மொத்தம் 490 முகாம்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா மெகா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்த முகாம்களில் சுமார் 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று, இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூடபோடாதவர்களும், முதலாம் தவணை போட்டு முடித்து இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கொரோனா நோய்த் தொற்று முற்றிலும் ஒழியவில்லை. தினசரி கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவருகின்றார்கள். எனவே கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை உனர்ந்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.