ராசிபுரம், சேந்தமங்கலம் பகுதிகளில் திட்டப்பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளில் நலத்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, பொன்குறிச்சி ஊராட்சி, பொன்நகரில் கணினி மூலம் ஆன்லைன் பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் தற்போது வரை கணினி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தப்பட்ட விவரங்களை விரிவாக கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், ராசிபுரம் தாலுகா, காட்டூர் அணைக்கும் கரங்கள், அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியை பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டு, இப்பள்ளிக்கு அரசால் வழங்கப்படும் நிதி ஆதாரங்கள், செலவினங்கள், பயன்பெறும் குழந்தைகள், குழந்தைகள் கற்றல் திறன் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, சேந்தமங்கலம் தாலுகா, உத்திரகிடி காவல் ஊராட்சி, நாச்சிபுதூர் காலனியில் கணினி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆட்சியர் உமா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) கிழ்நன், வட்டாட்சியர் (தேர்தல்கள்) திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.