உயர்கல்வியை தொடர மாணவர்களுக்கு நிதி உதவி : கலெக்டர் வழங்கல்
மாணவர்கள் உயர்கல்வி தொடர்வதற்கு ரூ.1 லட்சம் நிதி உதவியை, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா டங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்கள் முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மொத்தம், 348 மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர். அவற்றை பெற்றுக் கொண்ட ஆட்சியர், பரிசீலினை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தொடர்ந்து, உயர்கல்வி தொடர முடியாத மாணவர்களுக்கு, உயர் கல்வி வழிகாட்டுதல் உதவி மையத்தின் மூலம், உயர்கல்வி தொடர்வதற்காக, நிதி உதவியாக தன் விருப்புரிமை நிதியில் இருந்து, 3 மாணவ, மாணவியருக்கு, தலா ரூ. 20 ஆயிரம் வீதமும், 4 மாணவிகளுக்கு, தலா ரூ. 10 ஆயிரம் வீதமும், மொத்தம் 7 மாணவ மாணவிகளுக்கு ரூ. 1 லட்சத்திற்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.
மேலும், சமூக பொறுப்பு நிதியில் இருந்து, நாபின்ஸ் நிறுவனம் சார்பில், தலா ரூ. 23 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில், 50 பள்ளிகளுக்கு நாப்கின் எரியூட்டி இயந்திரங்கள், நிறுவனத்தின் பொது மேலாளர் மோகன்பிரசாத் முன்னிலையில் வழங்கப்பட்டது. அதையடுத்து, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, துறை அலுவலரிடம் வழங்கிய ஆட்சியர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
டி.ஆர்.ஓ., மணிமேகலை, சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.