விதிமுறைகளை மீறி சிகரெட் லைட்டர் விற்பனை செய்த 6 கடைகள் மீது வழக்கு
எடையளவு விதிமுறைகளை மீறி சிகரெட் லைட்டர் விற்பனை செய்த 6 கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
HIGHLIGHTS
வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்கள் விற்பனையில், சட்டமுறை எடையளவு விதிமுறைகள் மீறப்படுவதாக, தமிழக தொழிலாளர் துறை கமிஷனருக்கு புகார்கள் வந்துள்ளன. அவரது உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையில், அதிகாரிகள் 10க்கும் மேற்பட்ட சிகரெட் லைட்டர் விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது,
6 கடைகளில் விற்பனை செய்யப்பட்ட சிகரெட் லைட்டர்களில் எடையளவு சட்ட விதிமீறல்கள் கண்டுபிடிக்கப் பட்டு, கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எடையளவு சட்டத்தின்படி, ஒரு பொருள் உபயோகிப்பவருக்கு, விற்பனை செய்யப்படும்போது பொருளின் பெயர், தயாரிப்பாளர் பெயர், பொருளில் சேர்க்கப்பட்டுள்ள பொருளின் அளவு, விலை, காலாவதியாகும் நாள் ஆகியவை அச்சிடப்பட வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்களில் சட்டமுறை எடையளவுகள்விதிகள் பின்பற்றப்படுவதில்லை.
இது போன்று விற்பனை செய்யப்படும் பொட்டலப் பொருட்கள் அனைத்தும் உரிய அறிவிக்கைகள் குறிப்பிட்டு விற்பனை செய்யப்பட வேண்டும். தவறினால், திடீர் ஆய்வு செய்து, விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.