நாமக்கல்லில் குடிசை மாற்று வாரிய வீடுகள்: பயனாளிகள் தேர்வு முகாம்
நாமக்கல்லில் குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வு முகாம் துவங்கியது.
HIGHLIGHTS
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் நாமக்கல் நகராட்சி மற்றும் எருமப்பட்டி நாகராஜபுரம் பகுதிகளில் முறையே 960, 192 மற்றும் 240 என மொத்தம் ஆயிரத்து 392 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தேர்வு நேற்று நாமக்கல் தாசில்தார் அலுவலக வளாகத்தில் துவங்கியது. இம்முகாமை தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு நிர்வாக பொறியாளர் தனசேகரன் துவக்கிவைத்தார். இம்முகாம் இன்றும் (13ம் தேதி), நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து நிர்வாக பொறியாளர் தனசேகரன் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு விண்ணப்பிக்கும் பயனாளிகள் நாமக்கல் நகராட்சி பகுதியை சார்ந்தவர்களாக இருக்கவேண்டும். விண்ப்பிக்க வருவோர்விண்ணப்பத்துடன் குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் குடும்ப புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக இருக்கவேண்டும்.
மேலும் பயனாளி மற்றும் பயனாளியின் குடும்பத்தினருக்கு சொந்த வீடோ, நிலமோ இருக்கக்கூடாது. வீடு ஒதுக்கீடு பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பயனாளியும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகை நகராட்சியெனில் திட்டப்பகுதிக்கு ஏற்ப ரூ.ஒரு லட்சத்து 49 ஆயிரமும், ரூ.ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 700ம் மற்றும் நாகராஜபுரம் திட்டப்பகுதி எனில் ரூ.ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 75 வீதம் முன் பணமாக செலுத்தவேண்டும். விருப்பமுள்ள பயனாளிகள், முகாம் நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து உரிய ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் என தெரிவித்தார். இம்முகாமில் உதவி நிர்வாக பொறியாளர்கள் சீனிவாசன், சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.