புகையிலைப் பொருட்கள் விற்றால் வங்கி கணக்குகள் முடக்கம்: கலெக்டர் எச்சரிக்கை
Kutka Case- நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
Kutka Case- நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலவலகத்தில், மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு குழுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வோர், பதுக்கி வைத்திருப்போரை கண்டறிதல், இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் கலெக்டர் பேசியதாவது: தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்படும். பள்ளி மாணவ, மாணவிகள் வாழ்வில் சரியான பாதையில் முன்னேற விண்ணைத்தொடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒழுக்கத்தின் உயர்வு, கல்வியில் முன்னேறுவது குறித்து டாக்டர்கள், ஆசிரியர்கள், நெறியாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
தொடர்ந்து டாக்டர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளான கர்ப்பிணிகளின் விபரங்களைப் பதிவு செய்தல், மாதாந்திர பரிசோதனை, மகப்பேறு சிகிச்சை அளித்தல், பிரசவ சிகிச்சை, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி, பிறப்பு சான்றிதழ் வழங்குதல், குடும்ப நலம், கெரோனா தடுப்பூசி பணிகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி உள்ளிட்ட சுகாதார பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் அதிக மகப்பேறு சிகிச்சைகளை மேற்கொண்ட அரசு டாக்டர்களுக்கு, கலெக்டர் கேடயங்களை வழங்கி பாராட்டினார். ஏடிஎஸ்பி சேகர், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, துணை இயக்குநர்கள் பிரபாகரன்,வளர்மதி, வாசுதேவன், ஜெயந்தினி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2