நாமக்கல்: அங்கன்வாடி மையத்தில் வைத்து அதிகாரிகளை பூட்டியதால் பரபரப்பு
நாமக்கல் அருகே அங்கன்வாடி மையத்தில், அதிகாரிகளை வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் அருகே லக்கம்பாளையம் கிராமம் உள்ளது. அங்குள்ள அங்கன்வாடி மையத்தில், அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்த மையத்தில் கடந்த 2018ம் ஆண்டு முதல், அங்கன்வாடி உதவியாளர் இல்லை. அதனால் அங்கன்வாடி பணியாளர் சசிகலா குழந்தைகளை கண்காணித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளை அங்கன்வாடி மையத்தில் சமைக்க முடியாது என அதிகாரிகளிடம் சசிகலா தெரிவித்துள்ளார். எனினும், அதிகாரிகள் எவ்வித மாற்று நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், சம்பவத்தன்று குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வித்யாலட்சுமி, மேற்பார்வையாளர் அனுசியா ஆகியோர் லக்கம்பாளையம் அங்கன்வாடி மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கன்வாடி மையத்தினுள் குழந்தைகளுடன் அதிகாரிகள் இருவரையும் வைத்து அங்கன்வாடி பணியாளர் சசிகலா, கதவை பூட்டியுள்ளார். இதற்கு அப்பகுதி பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் பரிமளாதேவி, பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அங்கன்வாடி மையத்தில் குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து தரவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டு உள்ளே இருந்த அதிகாரிகள் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனடர். மேலும், குழந்தைகளுக்கான மதிய உணவு அருகே உள்ள மற்றொரு மையத்தில் இருந்து கொண்டுவந்து வழங்கப்பட்டது.