நாமக்கல் மாவட்ட மக்கள் குறைதீர் முகாமில் பெறப்பட்ட 452 கோரிக்கை மனுக்கள்
நாமக்கல் மாவட்ட மக்கள் குறைதீர் முகாமில் 452 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் 452 பொதுமக்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 452 மனுக்களை வழங்கினார்கள்.
அவற்றை பரிசீலனை செய்த கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.6,000 வீதம் ரூ.18,000 மதிப்பில் 3 பயனாளிகளுக்கு இலவச தையல் மெஷின்கள், தாட்கோ சார்பில் 1 பயனாளிக்கு ரூ. 3,500 மதிப்பில் சலவைப்பெட்டி, ஒரு விவசாயிக்கு நிலம் வாங்குவதற்காக, மானியத்துடன் ரூ. 4,05,000 கடன் உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவி மற்றும் முதல்வர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் மருத்துவ இன்சூரன்ஸ் அடையாள அட்டைகளையும் பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.2,780/- வீதம் ரூ.11,120/- மதிப்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட சப் கலெக்டர் பிரபாகரன், மாவட்ட தாட்கோ மேலாளர் ராமசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.