நாமக்கல்லில் மர்ம நபர்களால் 28 டூ வீலர்கள் தீ வைத்து எரிப்பு: போலீஸார் விசாரணை
நாமக்கல்லில் மர்ம நபர்களால் 28 டூ வீலர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்
HIGHLIGHTS
நாமக்கல்லில், மர்ம நபர்களால் 28 டூ வீலர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்- துறையூர் ரோட்டில் உள்ள, கொசவம்பட்டியை சேர்ந்த சம்பூரணம் என்பவர் பழைய டூ வீலர்களை வாங்கி விற்பனை ö சய்து வருகிறார். இவர் உபயோகப்படுத்திய பழைய டூ வீலர்களை வாங்கி தனது வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் டூ வீலர் மெக்கானிக் பட்டறை நடத்தி வரும் சுரேஷ் என்பவர் தனது பட்டறைக்கு வரும் வாகனங்களையும் அதற்கு அருகில் நிறுத்தி வைத்துள்ளார். சம்பவத்தன்று, இரவு வழக்கம்போல பணிகளை முடித்துக்கொண்டு, சுரேஷ் தனது பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் அதிகாலை 2 மணியவில் திடீரென அங்கு நிறுத்தப்பட்டு இருந்த டூ வீலர்கள் தீப்பிடித்து எரிந்தன. மொத்தம் 28 டூ வீலர்களில் தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதி புகை மண்டலமாக மாறியது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய தீயணைப்பு அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் பெரும்பாலான டூவீலர்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
இதுகுறித்து பட்டறை உரிமையாளர் சுரேஷ், டூ வீலர் விற்பனையாளர் சம்பூரணம் ஆகியோர் நாமக்கல் போலீசில் புகார் செய்தனர். அதில் 28 டூ வீலர்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்து இருப்பதாகவும், அவற்றின் மதிப்பு சுமார் ரூ.18 லட்சம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். தொழில் போட்டி காரணமாக மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி டூ வீலர்களை தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.