நாமக்கல் மாவ ட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 189 பேருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
நாமக்கல்லில் அரசு ஆஸ்பத்திரிகளில் நடைபெற்ற பரிசோதனையில் கடந்த ஒரு ஆண்டில் 189 பேருக்கு எச்ஐவி பாதிப்பு கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகளின் சம்மேளனம் 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மாதம் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஒவ்வொரு தனிநபரும் எச்.ஐ.வி இல்லா சமூகம் உருவாக தங்களின் அர்ப்பணிப்பையும் பங்களிப்பையும் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு சமப்படுத்துதல் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு அனைத்து நிலையிலும் எச்ஐவி இல்லா சமூகம் உருவாக பங்களிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி எச்ஐவி தொற்றின் தற்போதைய நிலை 0.924 சதவீதமாக உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 25 ஒருங்கினைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் மூலமாகவும், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும் இலவசமாக எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் செயல்படும் நம்பிக்கை மையங்களில் ஏப்ரல் -21 முதல் மார்ச் - 22 வரை 9,295 காப்பிணிபெண்கள் எச்.ஐ.வி பரிசோதனை செய்துள்ளனர். இவர்களில் 16 பெண்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் தொற்று இல்லாத குழந்தையினை பெற்றெடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் 54,348 பொதுமக்களுக்கு எச்ஐவி பரிசோதனை செய்ததில் 189 நபர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் கூட்டு மருந்து சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் தொற்றுள்ள காப்பிணி தாயாரிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை, திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் மூன்று ஏ.ஆர்.டி கூட்டுமருந்து சிகிச்சை மையங்களில் அக்டோபர்-2022 வரையில் ஏ.ஆர்.டி கூட்டுமருந்து சிகிச்சை பெறுவதற்கு தகுதியுள்ள 7,245 நபர்கள் தற்பொழுது சிகிச்சையினை பெற்று வருகின்றனர். இதனுடன் 10 இணை ஏ.ஆர்.டி மையங்கள் கொல்லிமலை, மல்லசமுத்திரம், கபிலர்மலை, மோகனூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம், பரமத்தி-வேலூர், பள்ளிபாளையம், நாமகிரிப்பேட்டை மற்றும் வினைதீர்த்தபுரம் அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகின்றன.
நாமக்கல்லில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி துவக்க விழா அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முக்கிய வீதிகளின் வழியாக பேரணி நடைபெற்றது.
மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டுதல், துண்டு பிரசுரங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு திட்ட மேலாளர் சித்ரா, டிஎஸ்பி சுரேஷ் உள்ளிட்ட டாக்டர்கள், நர்சுர்கள், மாணவ மாணவிகள், பணியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.