மழை நீரில் மிதக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
கனமழையால் குமாரபாளையத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மழைநீரில் மிதந்து வருகிறது
HIGHLIGHTS
குமாரபாளையத்தில் பெய்த கன மழையால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மழைநீரால் சூழப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென் மாவட்டங்களிலும் கேரள எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது. செப்டம்பர் மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்தது. இதையடுத்து அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இது மார்கழி மாதத்திற்குள் முடிவடை வதுதான் வழக்கம். வடகிழக்கு பருவமழை மூலம் தமிழகமும் புதுவையும் பயன் பெறும்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை எப்போது என்பது குறித்து இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டிருந்தது. அதன்படி வரும் 20 -ஆம் தேதி வடகிழக்கு பருவமழை பெய்வதற்கான சாதகமான சூழல் உருவாகி வருகிறது இந்த முறை மழை இயல்பாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், குமாரபாளையத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையின் காரணமாக நகரின் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கோம்பு பள்ளத்தில் வரும் மழை நீர், சுற்றுச்சுவர் உடைப்பால் பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் மற்றும் கழிவுநீர் உள்ளே நுழைந்து குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
பலமுறை அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகளின் மெத்தனத்தால் இந்நிலை தொடர்கதையாகி வருகிறது. மாணவியரின் நலனில் அக்கறை கொண்டு பள்ளி வளாகத்திற்குள் கோம்பு பள்ளத்தின் நீர் வராதபடியும், உயரம் குறைவாக இருக்கும் பள்ளியின் சுற்றுச்சுவர் உயரத்தை அதிகபடுத்தி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையத்தில் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மட்டும் இருந்தது. கல்வியாளர் நடராஜா செட்டியார் பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரியை முதன் முதலில் குமாரபாளையத்தில் நிறுவினார் அதன்பின்னர், ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. காலப்போக்கில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதே வளாகத்தில் நடுவில் சுற்றுச்சுவர் மூலம் தடுத்து அமைக்கப்பட்டது. பல நன்கொடையாளர்கள் மூலம் வகுப்பறைகள் கட்டப்பட்டன. ஆயிரத்திற்கும் மேலான மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.
விளையாட்டு ஆசிரியர்களின் பயிற்சியால், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தபட்டு மாணவ, மாணவிகள் பல சாதனைகளை படைத்து வருகிறார்கள். பல வெளியூர்களில் நடக்கும் மண்டல மாநில போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகிறார்கள். இப்படிப்பட்ட பெருமை மிக்க பள்ளியில், மாணவியர் கழிப்பிடம் அருகே உள்ள சுற்றுச்சுவர் மிகவும் தாழ்வாக உள்ளது. இதனை உயர்த்தி கட்டிக் கொடுக்க வேண்டி, மக்கள் நீதி மையம் மகளிரணியினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
எந்த அதிகாரியும் இதனை கண்டு கொள்வதாக இல்லை. இதனால் மாணவிகள் மிகவும் சங்கடப்படும் நிலை உள்ளது. தற்போது, பெய்த கன மழையால், அருகே உள்ள கோம்பு பள்ள கழிவுநீர், சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு, பள்ளி வளாகத்தில் நுழைந்தது. இதனால் பல நாட்கள் விடுமுறையும் விட்டனர். ஆனால், இந்த பள்ளி வளாகத்தில் மழைநீர், கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.