நாகூர் ஆண்டவர் தர்கா சந்தனக்கூடு விழா
புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 464 ம் ஆண்டு சந்தனக்கூடு விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 464-ம் ஆண்டு கந்தூரிவிழா கடந்த 14 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நாகப்பட்டினத்திலிருந்து துவங்கியது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, நாகப்பட்டினத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
அப்போது ஊர்வலத்தில் வழி நெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சந்தனக்கூட்டின் மீது பூக்களை தூவியும் பல்வேறு வடிவில் வந்த மினாராக்களை கண்டும் மகிழ்ந்தனர். சந்தனக்கூடு ஊர்வலமானது அதிகாலை 4 மணிக்கு நாகூரை சென்றடைந்தது. பின்னர் நாகூர் ஆண்டவர் சமாதியில் நடைபெறும் சந்தனம் பூசும் வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தாரை, தப்பட்டை பேண்டு வாத்தியங்கள் உடன் மக்கள் ஆடிப்பாடி ஊர்வலமாக செல்ல போலீசார் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.