மதுரை அருகே பாதியில் நின்ற கோயில் திருப்பணி : பொதுமக்கள் கோரிக்கை
நிதி ஒதுக்கீடு செய்து திருப்பணியை நிறைவு செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
HIGHLIGHTS
மதுரை மாவட்டம், காஞ்சரம் பேட்டையில உள்ளது பிரசித்தி பெற்ற மாமொண்டி அய்யனார் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ,சுமார் 400 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில், கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த 2009 ம் ஆண்டு திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டது. இதற்காக, அரசு, தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை சார்பில் ரூ 17 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்தது.
இதை த்தொடர்ந்து, ரூ 10 லட்சம் வரை முதல் தவணையாக நிதி வரப் பெற்றது. அதன் மூலம் திருப்பணி வேலைகள் நடந்தது. ஆனால் , இந்தப் பணிகள் பாதியிலேயே நின்றது. மேலும், கடந்த 13 ஆண்டுகள் தடைபட்ட இந்த பணிகள் மீண்டும் பூர்த்தியாக, அரசு பிடித்தம் செய்து வைத்துள்ள ரூ 7 லட்சத்து 10 ஆயிரத்தை உடனடியாக வழங்கி மீண்டும் திருப்பணிகள் தொடங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ,தற்போதுள்ள விலை ஏற்றத்தின் காரணமாக மொத்தம் ரூ 10 லட்சமாவது திருப்பணிக்கு தேவைப்படுகிறது.
இது குறித்து, சம்பந்தப்பட்ட கோவில் பொறுப்பாளர்கள், அறநிலைய துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும், அரசு இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அரசு விரைவில் குறிப்பிட்ட நிதி ஆதாரங்களை ஒதுக்கீடு செய்து திருப்பணியை நிறைவுசெய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது சம்பந்தமாக இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் விஜயன் கூறியதாவது: காஞ்சரம் பேட்டை மாமொண்டி அய்யனார் சுவாமி கோவில் திருப்பணிகள் முழுமையாக பூர்த்தியடைய,உரிய நிதியை வருவதற்கு வேண்டிய அனைத்து முன்னற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.விரைவில், பணிகள் தொடங்கப்படும் என்றார் அவர்.