கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து 1,804 கனஅடி தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து வினாடிக்கு 1,804 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையாலும், கெலவரப்பள்ளி அணையில் திறக்கப்படும் தண்ணீராலும் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1346 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை சற்று அதிகரித்து வினாடிக்கு 1,739 கனஅடியாக நீர்வரத்து உள்ளது.
மேலும் 52 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில், தற்போது 51.15 அடிக்கு தண்ணீர் உள்ளதால், அணையில் பாதுகாப்பு கருதி, பாசன கால்வாய்கள் மற்றும் தென்பெண்ணை ஆற்றிலும், வினாடிக்கு 1,804 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் கூடுதலாக திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர், அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் நீரில் முழ்கியுள்ளது. ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றங்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும், கால்நடைகளை சுத்தம் செய்யவும், மக்கள் குளிக்கவோ செல்லக்கூடாது என்றும், மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.