அக்குபஞ்சர் சிகிச்சை பெற்ற கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
ஓசூர் அருகே அக்குபஞ்சர் சிகிச்சை பெற்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தது தொடர்பாக ஓசூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
ஒசூர் அருகேயுள்ள தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் ரியாஸ். பஞ்சர் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கோரிமா. இவர்களுக்கு திருமணமாகி 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். தற்போது கோரிமா இரண்டு மாதம் கர்ப்பிணியாக உள்ளார். கோரிமா கடந்த சில நாட்களாக நெஞ்சுவலி, வயிற்றுவலி போன்ற நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவரது கணவர் ரியாஸ் அவரை மருத்துவர்களிடம் அழைத்து சென்று மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில் ரியாஸ் தனது மனைவி கோரிமாவிற்கு அங்குள்ள ஒரு அக்குபஞ்சர் மருத்துவரிடம் மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
மருத்துவம் பார்த்த சிறிது நேரத்தில் கோரிமா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ரியாஸ் கோரிமாவை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஒசூர் ஹட்கோ போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்குபஞ்சர் சிகிச்சை பெற்ற பின்னர் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்ததால் மருத்துவத்துறையினரும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.