கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா
கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
HIGHLIGHTS
கரூர் நகரின் மையப் பகுதியில், கரூர் மாரியம்மன் ஆலயத்தின் அருகே அமைந்திருக்கும் ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் தைமாத சங்கடஹர சதுர்த்தி நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முன்னதாக மூலவர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகருக்கு, பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட விசேஷ, சிறப்பு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் மூலவருக்கு பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் சந்தனம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க அங்கி அணிந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் மூலவர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகருக்கு கோபுர ஆரத்தி மற்றும் கற்பூர ஆரத்தி ஆகியவைகள் எடுக்கப்பட்டு, பின்னர் நடைபெற்ற மகா தீபாராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொரோனா கால கட்டுப்பாடுகளை உணர்ந்து பக்தர்கள் குறைந்த அளவு மட்டுமே கலந்து கொண்டனர்.
உலக நன்மைக்காக நடைபெற்ற இந்த சங்கடஹர சதுர்த்தி பூஜையில், கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் ஆகியவைகள் உலகினை விட்டு விலக வேண்டியும், மக்கள் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாக வாழவும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை ஆலய ஸ்தானிக்கர் வசந்த் சர்மா செய்தார்.