புங்கம்பாடி சிவன் கோயிலில் சங்காபிஷேகம்: பக்தர்கள் வழிபாடு
குடகனாற்றின் கரையில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
HIGHLIGHTS
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்துள்ள புங்கம்பாடி குடகனாற்றின் கரையில் அமர்ந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் இன்று நடைபெற்ற 108 சங்காபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவில் 1702 ஆம் வருடம் கடைசியாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது என அங்குள்ள கல்வெட்டு மூலம் தெரியவந்துள்ளது. இந்த சிவாலயத்தில் சொக்கக்நாதர் உடனமர் மீனாட்சி அம்மன் மூலவர்களாகவும் பிறசன்னதிகளாக தட்சிணாமூர்த்தி , லிங்கோத்பவர், பிரம்மா , துர்க்கை, சண்டிகேஸ்வரர் , பைரவர் ஆலயமும் தல விருட்சமாக வில்வமும் உள்ளது.
கோவிலின் மேற்குப்பகுதி சுற்றுச் சுவர் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் இடிந்துள்ளது. அதன் பின்னர் நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்த நிலையில் கிடந்தது. இதையடுத்து, கிராம மக்களின் தீவிரமான முயற்சியால் தற்போது, பிரதோஷம், பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி மற்றும் முக்கிய நாட்களில் இக்கோவிலில் பூஜை நடைபெற்று வருகிறது. தற்பொழுது இக்கோவில் திருப்பணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், 4 ஆம் ஆண்டாக நிகழ்வாக ஷோமவார சங்காபிஷேகம் விழா இன்று விமர்சியாக நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் தொடங்கி இந்த 108 சங்காபிஷேக விழா சிவாச்சாரியார்களின் மந்திர முழக்கத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.