இரு கால்களும் மடங்கி பிறந்த குழந்தையின் சிகிச்சைக்கு உதவி செய்ய கோரிக்கை
குமரியில் இரு கால்களும் மடங்கி பிறந்த ஏழை குழந்தையின் மருத்துவத்திற்கு அரசு உதவி செய்ய பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தாழக்குடி பகுதியை சேர்ந்தவர் வினோத் ஐஸ்வர்யா தம்பதியினர்.
இவர்களுக்கு பிரபா விக்னேஷ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருக்கும் நிலையில் இந்த குழந்தை பிறவியிலேயே கால் பாதங்கள் இரண்டும் மடங்கி நடக்க முடியாமல் இருந்து வருகிறான்.
இதனிடையே பல அரசு மருத்துவமனைகள், வைத்தியசாலைகள், தனியார் மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கியும் எந்த பலனும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலமாக கால் பாதங்களை சரி செய்வதே ஒரே வழி என்றும் உடனடி அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை என்றால் கடைசி வரை குழந்தையால் நடக்க முடியாது என்றும் மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.
ஆனால் அதற்கு குறைந்த பட்சம் இரண்டு லட்ச ரூபாய் வரை செலவாகும் என்ற நிலையில் அன்றாடம் கூலி வேலை பார்த்து அதில் கிடைக்கும் சிறு வருவாய் மூலம் குடும்பத்தை நடத்தி வரும் தங்களால் அவ்வளவு பெரிய தொகையை எடுக்க இயலாது என கூறும் வினோத் ஐஸ்வர்யா தம்பதிகள் தனியார் மருத்துவமனை மூலமாக குழந்தையின் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தமிழக அரசு உதவி செய்தால் மற்ற குழந்தைகளைப் போல தங்களது குழந்தையும் சாதாரணமாக நடக்கும் என கூறியதோடு அரசு தங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை பிரபா விக்னேஷுடன் பெற்றோர் மனு அளித்தனர்.