உள்நோயாளிகள் அனுமதி நிறுத்தம்
கொரோனாவால் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் உள்நோயாளிகள் அனுமதி நிறுத்தம்.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பூசி போட்டவர்களையும் கொரோனா தாக்கி வருகிறது. வருகிற மே மாதம் குமரி உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா உச்சம் பெரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இதனை கருத்தில் கொண்டும் நோய் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற வசதியாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பத்பநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை, ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோவிட் கேர் சென்டர்கள் போன்றன தயார்நிலை படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீண்டும் கொரோனா வார்டாக மாற்றப்பட உள்ளது. இதன் காரணமாக தற்போது உள்நோயாளிகள் அனுமதி நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஒரு வார காலத்திற்குள் உள் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்து கொரோனா வார்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நேற்று முதல் உள்நோயாளிகள் அனுமதி நிறுத்தம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிற உள் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது.