தேர்வு நேரங்களில் சர்ச்சையில் சிக்கும் காஞ்சிபுரம் தேர்வு மையம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாளர் மையம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் இம்மையத்தில் நான்காவது முறையாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
HIGHLIGHTS
கடந்த நான்காவது முறையாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மையத்தில் தேர்வர்கள் பிரச்சனையில் ஈடுபடும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருவதும் , இதனை இடம் மாற்றம் செய்ய பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
நேற்று தமிழ்நாடு அரசு தேர்வு தேர்வு பணியாளர் மையம் மூலம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை மற்றும் மாலை வேலைகளில் இருவேளைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வர்களுக்கு அதற்கு உண்டான நுழைவுச்சீட்டு 1069 தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் காலையில் தேர்வு முடிந்து பின் மதியம் 2 மணிக்கு துவங்க வேண்டிய தேர்வுக்கு வரும் தேர்வர்கள் 30 நிமிடம் முன்னதாக தேர்வு மையத்தின் உள் நுழைய வேண்டும் என விதிகள் உள்ள நிலையில் மதியம் 1.30 மணி அளவில் தேர்வு மைய கதவுகள் மூடப்பட்டதால் 50க்கும் மேற்பட்ட தேர்வர்கள் உள்ளே விட கோரி காவல்துறையிடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மெல்ல மெல்ல இரு தரப்புக்கும் வாக்குவாதம் நிலையை வந்த நிலையில் திடீரென தேர்வர்கள் நுழைவாயில் கதவை உடைத்து தேர்வர்கள் உள்ளே புகுந்து தேர்வெழுத தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காலை வேளையில் நடைபெற்ற தேர்வின் போது தாமதமாக வந்த நபர்களை பத்து நிமிடம் வரை அனுமதித்த நிலையில், மதியம் நடைபெற்ற தேர்வில் குறைந்தபட்சம் ஒரு நிமிடம் தாமதமாக வந்தவர்கள் கூட அனுமதிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் இந்த மையம் அமைந்துள்ள சாலையில் எந்தவித போக்குவரத்து வசதிகளும் கிடையாது. காஞ்சிபுரம் நகரில் இருந்து இந்த தேர்வு மையத்திற்கு ஆட்டோவில் செல்ல குறைந்தபட்சம் 200 ரூபாய் செலவழிக்க வேண்டும்.
மேலும் இந்த மையத்துக்கு செல்லும் வழியில் ரயில்வே கேட் ஒன்று உள்ளது. இது தேர்வு நேரத்தின்போது தான் அவ்வழியாக செல்லும் ரயிலுக்காக கேட் மூடப்படுவது வழக்கம். இதனால் இதை அறியாத தேர்வர்கள் இந்த ரயில்வே கேட்டில் சிக்கி தாமதமாக செல்லும் நிலையும் ஏற்படுகிறது.
கல்லூரி அமைந்துள்ள பகுதியில் எந்தவித உணவகங்களும் சிறு கடைகளோ அதிக அளவில் இல்லாததும் விடுமுறை நாட்களில் தேர்வு நடைபெறுவதால் அந்த கடைகளும் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பலமுறை இதில் சிக்கி தேர்வு எழுத தாமதமாக சென்று தேர்வு மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடுவது இது நான்காவது முறையாக உள்ளது.
இதுபோன்ற பல சிக்கல்கள் உள்ள தேர்வு மையத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மையம் ஏன் தேர்ந்தெடுகிறது என்ற கேள்வி பல்வேறு தரப்பிலும் எழுப்பப்படுகிறது.
நகரில் போக்குவரத்து வசதி உணவகம் என அனைத்து அடிப்படை வசதிகளும் பல்வேறு பகுதிகளில் செயல்படும் பள்ளி கல்லூரிகள் அருகிலேயே இருக்கும் நிலையில் அதை தவிர்த்து, இங்கு தேர்வு நடத்துவது ஏன் என்ற கேள்வியும் , இதனால் பல தேர்வர்களின் கடின உழைப்பு, மன உளைச்சலுக்கு தேர்வர்கள் ஆளாகும் நிலையில் இனி வரும் காலத்தில் ஆவது இந்த தேர்வு மையத்தில் டி என் பி எஸ் சி தேர்வு அலுவலகம் தவிர்க்குமா ?