பத்திரப்பதிவு அலுவலர் வீட்டில் 42 சவரன் திருட்டு - 4 பேர் கைது
சின்ன காஞ்சிபுரம் பத்திரப்பதிவுத்துறை அலுவலர் வீட்டில் திருடப்பட்ட 42 சவரன் நகை மீட்கப்பட்டது; இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் தாலுகா காவல் எல்லைக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம் சுதர்சன் நகரில் வசிப்பவர் ராஜி. இவர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவிதா, வாலாஜாபாத் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த மாதம் இவரது உறவினர் வீட்டு திருமணத்திற்காக சென்றுவிட்டு, மாலை 4 மணியளவில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த சுமார் 9 லட்சம் மதிப்பிலான 42 சவரன் நகை களவு போய் இருந்தது. இதுதொடர்பாக கவிதா அளித்த புகாரின் பேரில், தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து ஆய்வாளர் ராஜகோபால் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், காஞ்சிபுரம் கிளை சிறைச்சாலையில் இருந்த சிவகங்கை , சேலம் மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேர்கள் மீது சந்தேகம் எழுந்தது. அதன் பேரில், அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து அதில் இந்த 4 பேரும் வீடு புகுந்து களவு செய்தது உறுதி செய்யப்பட்டது. சேலத்தை சேர்ந்த மனோஜ், சிவகங்கையை சேர்ந்த ராஜாராம், கார்த்திக்ராஜா, நிலக்கோட்டையை சேர்ந்த திலிப்திவாகர் ஆகியோரை மதுரைக்கு அழைத்து சென்று, அவர்களிடம் இருந்து 42 சவரன் நகைகள் மீட்கப்பட்டன. மேற்படி நபர்களை காஞ்சிபுரம் ஜே.எம் 2 குற்றவியல் நீதிமன்றம் இரண்டு, நீதிபதி சரவண குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி தஞ்சாவூர் டவுன் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.