சாலவாக்கம் பெருமாள் கோவிலில் பாலாலயம்: ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணி
சாலவாக்கத்தில் அமைந்துள்ள இத்திருக்கோயிலினை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ 13 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணி நடைபெறவுள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் வட்டம் , சாலவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் சிதிலம் அடைந்து வருவதை கருத்தில் கொண்டு கிராம பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் பரிந்துரையின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை சுமார் ரூ13 லட்சம் மதிப்பிலான திருப்பணி செய்ய முடிவு செய்தது.
அவ்வகையில் நேற்று லட்சுமிநரசிம்ம பட்டாச்சாரியா தலைமையிலான குழுவினர் முதல் கால பூஜையும், இன்று காலை இரண்டாம் கால பூஜையும் நடைபெற்று பூர்ணாஹுதி ஹோமங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதன்பின் சிறப்பு ஹோமத்தில் வைக்கப்பட்ட கலச புனிதநீர் வெங்கடேச பெருமாள் , ஆஞ்சநேயர் உள்ளிட்ட விக்கிரகங்கள் வரையப்பட்ட அத்தி பலகைக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு பாலாலயம் மேற்கொள்ளப்பட்டது.
இவ்விழாவில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் , ஒன்றிய செயலாளர் குமார் , கோயில் செயல் அலுவலர் ஸ்ரீதரன், திருக்கோயில் ஆய்வாளர் ஸ்ரீமதி , ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சத்யா, SPV சக்திவேல் உள்ளிட்ட கிராம பெரியோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பாலாலய விழாவையொட்டி உற்சவர் ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
விழாவினை ஒட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.