புதியதாக திறக்கப்பட்ட அரசு மதுபான கடைக்கு எதிர்ப்பு: பஸ் சிறைபிடிப்பு
காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளுர் கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மதுக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தனியார் பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் கிராமத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுபடி சர்வே எண் 236/02 , பட்டா எண் 665 சரவணன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இன்று அரசு மதுபானக் கடை எண் 4059 புதிதாக திறக்கப்பட்டது.
புதிய கடைக்கு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரியம்பாக்கம் கிராமத்தினை சேர்ந்த 50 பெண்கள் கடை திறக்கக் கூடாது என்றும், இந்த வழியாகத்தான் எங்கள் பிள்ளைகள் பள்ளிக்கும், நாங்களும் வேலைக்கு சென்று வருவதால் மது அருந்த வருபவர்களால் அச்சம் உள்ளதாக தெரிவித்து அப்பகுதி வழியாக வந்த தனியார் பேருந்தை சிறைபிடித்தனர்.
அப்போதைக்கு வந்த தாலுகா காவல் ஆய்வாளர் ராஜகோபால் பொதுமக்களிடம் சமரசம் பேசி இது குறித்து ஆட்சியரிடம் தெரிவியுங்கள் என தெரிவித்தார்.
இதற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை நேரில் சந்தித்து மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்த நிலையில், தற்போது அவரே இதற்கு அனுமதி அளித்தது வருத்தம் அளிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.