காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத்
காஞ்சிபுரத்தில் லோக் அதாலத் நிகழ்ச்சியை மாவட்ட நீதிபதி செம்மல் துவக்கி வைத்தார்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து தொடர்பான வழக்குகளை கையாள இன்று சிறப்பு லோக் அதாலத் நிகழ்ச்சியினை மாவட்ட நீதிபதி செம்மல் துவக்கி வைத்தார்.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல் படியும் காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு சிறப்பு மோட்டார் வாகன விபத்து வழக்குகளை கையாளும் வகையில் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியினை மாவட்ட நீதிபதி பா.செம்மல் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் , கூடுதல் சார்பு நீதிபதியுமான கே.எஸ்.அருண்சபாபதி முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 150 வழக்குகள் கையாள திட்டமிடப்பட்டு அதற்கான வழக்காடிகள் , வழக்கறிஞர்கள் மற்றும் இன்சூரன்ஸ் துறை நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இரு தரப்பும் சமரச உடன்படிக்கை மேற்கொண்டு வழக்குகளை மகிழ்ச்சியுடன் முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த அமர்வில் குன்றத்தூர் மாங்காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு 2022 ஏற்பட்ட விபத்து தொடர்பான இழப்பீடாக ரூபாய் ஒரு லட்சமும் , களக்காட்டூர் அடுத்த காலூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் சாலை விபத்து வழக்கில் சமரசத் தீர்வும் ஏற்பட்டு அவருக்கு இழப்பீடாக ரூ. 4.25 லட்சம் நீதிபதி செம்மல் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் சார்பு நீதிபதி திருஞானசம்பந்தம், உரிமையியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரி, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா கிருபாகரன் மற்றும் வழக்கறிஞர்கள், வழக்கு பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.