காஞ்சிபுரத்தில் கூத்துக் கலை நூல் வெளியீட்டு விழா
காஞ்சிபுரம் அடுத்த ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் கூத்துக்கலை எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
கடந்த காலங்களின் தமிழர்களின் மரபோடு இணைந்தது கூத்துக்கலை. இந்த கூத்து கலையில் இசை, பாடல் வரிகளோடு நடனம் ஆடி புராண வரலாறு கதைகளின் கதாபாத்திரங்களை தத்ரூபமாக ஏற்று நீதி கதைகளையும் பல்வேறு விழிப்புணர்வு செய்திகளினை இதன் மூலம் தருவது வழக்கமாக கொண்டிருந்தனர்.
இரவு 10 மணிக்கு மேல் துவங்கும் இந்த தெருகூத்து அதிகாலை 4 மணி வரை நடைபெறும். இதை தொன்று தொட்டு கடந்த 50 ஆண்டுகளாக செய்து வந்த நபர்கள், தங்களுக்கு தற்போது போதிய வருமானம் கிடைக்காததால் இதனை பார்க்கும் தற்போதைய இளைஞர்கள் பாரம்பரிய கலை தொழில்களை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் மெல்ல மெல்ல இக்கலை மீதான ஆர்வம் குறைந்து வரும் நிலையில், காஞ்சிபுரம் அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நீ. ஏகாம்பரம் என்பவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கூத்துக் கலையில் ஆர்வமாக ஈடுபட்டு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் ஆண், பெண் என இருபால் வேடங்களிலும் சிறப்பாக நடிப்பில் செயல்பட்டு இருக்கிறார்.
இவர் தனது நாடக அனுபவங்களை *கூத்துக்கலை* எனும் புத்தகம் மூலம் எழுதி இளையை சமுதாயத்திற்கு எடுத்துரைத்துள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா இன்று காஞ்சிபுரம் தனியார் கூட்டரங்கில் முனைவர் ஏகா.ராஜசேகர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி. வி. எம். பி. எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டனர்.
இவ்விழாவில் பேசிய ஆட்சியர் , தனது சிறு வயதில் தனது சொந்த ஊரில் திருவிழா காலங்களில் இந்த கலைஞர்களின் கூத்துக்கலை நாடகங்களை பார்த்துள்ளதாகவும், தற்போது இதன் மேல் குறைந்து உள்ளதை போக்கும் வகையில் அரசு விழாக்களில் வாய்ப்பு வழங்க ஆலோசிப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பேசுகையில் , காஞ்சிபுரத்தில் புத்தக வெளியீட்டு விழா என்பது அரிதாக நடைபெற்று வருவதாகவும், பாரம்பரிய கலையான இதனை அழிவிற்கு கொண்டு செல்லாமல் காப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் , கவிஞர் ஜெயபாஸ்கரன், கல்வியாளர் சச்சிதானந்தம் , திமுக ஒன்றிய செயலாளர் பி எம் குமார், யுவராஜ், சமூக செயற்பாட்டாளர் பழ.மாணிக்கவேலு, மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கூத்துகலை கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.