காஞ்சிபுரத்தில் லோக் அதாலத்தில் 329 வழக்கு சமரசத்தீர்வு: சட்ட வட்டப்பணிகள் குழுவுக்கு பொதுமக்கள் பாராட்டு
காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்ட வட்ட பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், 329 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் வட்டார சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மக்கள் நீதிமன்றம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட நீதிபதி (பொறுப்பு) எம்.இளங்கோவன் தலைமை வகித்தார். தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி சிவஞானம், கூடுதல் சார்பு நீதிபதி திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும்,நீதிபதியுமான கே.எஸ்.கயல்வழி வரவேற்று பேசினார். இம்முகாமில் காஞ்சிபுரம் வரதராஜர் நகரை சேர்ந்த எஸ்.மோகன்ராஜ்-க்கு கடந்த 14.8.2019 ஆம் தேதியன்று நடந்த விபத்தில் வலது கால் முழுமையாக பாதிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டது.இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மணல் ஏற்றிச் சென்ற லாரி மோதியது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் நஷ் ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த மக்கள் நீதிமன்றம் எஸ்.மோகன்ராஜ்-க்கு ரூ.49லட்சம் நஷ்டஈடு வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இத்தொகையினை மாவட்ட நீதிபதி(பொறுப்பு)எம்.இளங்கோவன் மக்கள் நீதிமன்றத்தில் எஸ்.மோகன்ராஜிடம் வழங்கினார். மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 329 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டு 11கோடியே 42 லட்சத்து 29 ஆயிரத்து 818 ரூபாய் பைசல் செய்யப்பட்டு, தீர்வு காணப்பட்டதாக வட்டார சட்டப்பணிகள் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் நீதிபதிகள் சரண்யா செல்வம்,ஆர்.ராஜேஸ்வரி, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர்கள் எஸ்.ஜான், கார்த்திகேயன், அரசு வழக்குரைஞர் சத்தியமூர்த்தி ஆகியோர் உட்பட வழக்கறிஞர்கள், வழக்காடிகள், நீதிமன்ற பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் நீதிபதி வாசுதேவன் நன்றி கூறினார். இதையடுத்து பெரும் முயற்சி எடுத்த வட்ட சட்டப்பணிகள் குழுவினருக்கும், நீதிபதிகளுக்கும் பொதுமக்கள் பெரிதும் பாராட்டு தெரிவித்தனர்.