ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா; அமைச்சர் முத்துசாமி பங்கேற்பு
Erode news, Erode news today- ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் 1,894 மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் முத்துசாமி பட்டம் வழங்கி கவுரவித்தார்.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 1,894 மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி பட்டம் வழங்கி கவுரவித்தார்.
ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 50வது ஆண்டு பொன் விழா ஒரு வார நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில், 6வது நாள் நிகழ்ச்சியாக நேற்று 46 மற்றும் 47வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு தி முதலியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். செயலாளர் மற்றும் தாளாளரான கே.கே.பாலுசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், பெங்களூர் ஐஎஸ்இசி கல்லூரியின் முதுநிலை பேராசிரியருமான மாதேஸ்வரன் ஆகியோர் பங்கேற்று 1,894 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தனர்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது, ரோடு கலை அறிவியல் கல்லூரி நன்கு வளர்ச்சி பெற்று கொண்டு இருக்கிறது. கோவை மாவட்டத்தில் இருந்து ஈரோடு பிரிந்து தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பிறகு, பெரும் முயற்சி எடுத்து ஈரோட்டிற்கு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டது. இந்த ஐஆர்டிடி மருத்துவ கல்லூரி தான் கொரோனா காலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உதவியது. தமிழ்நாடு முதல்வர் தற்போது ஐ.ஏ.எஸ். படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகையாக ரூ.7 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். அது கல்லூரி படிப்பை முடித்த மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி பேசினார்.
காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மாதேஸ்வரன் பேசியதாவது, இளைஞர்கள் அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்துவதில் முன்னணியில் உள்ளனர். உலகில் எங்கும் பொருளாதார வளர்ச்சிக்கு இளைஞர்கள் ஒரு முக்கிய மூலதனமாக உள்ளனர். அவ்வாறான இளைஞர்கள் இந்தியாவில் அதிகளவில் இருப்பது நமக்கு சாதகமாக உள்ளது. இளைஞர்களின் திறன்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை வெளிக்கொணர வைப்பதே தற்போது பெரும் சவாலாக உள்ளது. ஏனெனில் இளைஞர்களுக்கு கல்வி மட்டும் அல்லாமல், திறன் மேம்படுத்தும் தரமான கல்வியும் தேவைப்படுகிறது.
மேலும், உடல்நலம் மற்றும் மனநலமும் தேவைப்படுகிறது, ஏனெனில் இந்த காரணிகள் இளம் மனதின் அறிவாற்றல் திறன்களை வளர்க்கவும், அவர்களை புதுமையான சிந்தனையாளர்களாக மாற்றவும் உதவுகின்றன. மாணவ-மாணவிகள் அரசாங்க பணி, தனியார் நிறுவன பணிகளை விரும்புவரை போல, தொழில் முனைவோராக வர முன்வாருங்கள். இதன்மூலம் தங்களின் வளர்ச்சி மட்டும் அல்ல நாட்டின் வளர்ச்சியும் மேம்படும். இவ்வாறு மாதேஸ்வரன் பேசினார்.
தொடர்ந்து, மதியம் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா மற்றும் சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இவ்விழாவில், தி முதலியார் கல்வி நிறுவனங்களின் பொருளாளர் விஜயகுமார், இணைச்செயலாளர் அருண்குமார் பாலுசாமி, முருகேசன், துணைத்தலைவர்களான மாணிக்கம், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று பேசினார். முன்னதாக தி முதலியார் கல்வி நிறுவனங்களின் செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் வரவேற்றார். கல்லூரியின் இயக்குநர் வெங்கடாச்சலம் நன்றி கூறினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் முதல்வர் சங்கரசுப்பிரமணியன் செய்திருந்தார்.