கோபிசெட்டிபாளையம் அருகே 47 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வேனில் 47 கிலோ புகையிலை பொருட்களை கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள அரக்கன்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று (மார்ச்.19) ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பிக்கப் வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையிட்டதில் 4 சாக்கு மூட்டையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதை பாக்குகள் மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், வேனை ஓட்டி வந்தது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் (வயது 33) என்பதும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை அரக்கன் கோட்டை மற்றும் வாணிப்புத்தூர் பகுதிகளில் பள்ளியருகே உள்ள பெட்டி கடைகளில் விற்பனைக்கு கொண்டு வந்ததும், சிறுவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இந்த புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நோக்கில் கொண்டு வந்ததும் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து, பிரதீப்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட (பாஃன் மசாலா) புகையிலை பொருட்கள் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள 46.780 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை வேனுடனும் மற்றும் 15 ஆயிரத்து 300 ரூபாய் ரொக்க பணத்தையும் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். பின்னர், பிரதீப்குமாரை கோபி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.