முககவசம் அணியாத பஸ் பயணிகளுக்கு அபராதம்
ஈரோடு பஸ் நிலையத்தில், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் ஆய்வு செய்து முககவசம் அணியாத பயணிகளுக்கு அபராதம் விதித்தனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளி மாவட்டத்தில் இருந்து ஈரோடு பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பஸ்சில் ஏறும் பயணிகள் மற்றும் பஸ் கண்டக்டர், டிரைவர் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஈரோடு பஸ் நிலையத்தில் கொரோனா பாதுகாப்பு வழி முறைகளை முறையாகக் பின்பற்றப்படுகிறதா? என்பது அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். அதன்படி இன்று ஈரோடு பஸ் நிலையத்தில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை பார்வையிட்டார்.
பஸ் நிலைய வளாகத்துக்குள் முகக்கவசம் அணியாமல் வந்த சில பயணிகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதைப்போல் பஸ்சில் சில பயணிகள் முக கவசம் அணியாமல் இருந்தனர். அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.