10 கிலோ கஞ்சாவுடன் பெண் உட்பட இருவர் கைது
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் விற்பனைக்காககொண்டு வரப்பட்ட 1.50 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா பறிமுதல்... பெண் உட்பட இருவர் கைது.....
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கடம்பூர் காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடம்பூர் காவல்துறையினர் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடம்பூரில் இருந்து பவளக்குட்டை செல்லும் சாலையில் கூட்டார் தொட்டி பேருந்து நிலையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் 10 கிலோ எடை கொண்ட சுமார் 1.50 லட்சம் மதிப்பிலான கஞ்சா பாக்கெட்டுகளை இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.
உடனடியாக அவர்களிடம் இருந்த கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்கள் இருவரிடமும் விசாரனை மேற்கொண்டதில் அவர்கள் சேலம் மாவட்டம் சங்கிரி செட்டிப்பட்டியைச் சேர்ந்த ராணி (33) மற்றும் கொமராபாளையம், காவேரி நகரைச் சேர்ந்த பெருமாள் (31) என்பதும் இருவரும் கஞ்சாவை விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த கடம்பூர் காவல்துறையினர் அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.