ஈரோடு மாவட்டத்தில் தொலைந்து போன 72 செல்போன்கள் மீட்பு
ஈரோடு மாவட்டத்தில் தொலைந்து போன 72 செல்போன்கள் மீட்கப்பட்டன. அவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் உரியவர்களிடம் ஒப்படைத்தார்
HIGHLIGHTS
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது செல்போன்கள் தொலைந்து விட்டதாக கூறி புகார் கொடுத்தனர். அதன்பேரில் ஈரோடு மாவட்ட சைபர் செல் பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, செல்போன் தொலைந்து போன தேதி, நாள் மற்றும் இதர விவரங்களை வைத்து விசாரணை நடத்தினர்.
காவல்துறையின் துரித நடவடிக்கையால் ரூ.10 லட்சத்து 28 ஆயிரத்து 784 மதிப்பிலான 72 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து அதை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) நடந்தது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் கலந்துகொண்டு செல்போன்களை உரியவர்களிடம் வழங்கினார்.
மேலும், இந்தாண்டில் மூன்றாவது முறையாக 185 செல்போன்களும், கடந்த 2021 முதல் 2023 வரை ரூ.ஒரு கோடியை 28 லட்சத்து 22 ஆயிரத்து 726 மதிப்புள்ள 870 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.