வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் ஆர்ப்பாட்டம்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை திரும்ப வழங்கக்கோரி, கடத்தூர் பேருந்து நிலையம் அருகே, பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து, மதுரைக் கிளை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இடஒதுக்கீட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தருமபுரி பாமக சார்பில், கடத்தூர் பேருந்து நிலையம் அருகே , மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசு இந்த வழக்கின் மீது மேல்முறையீடு செய்ய வேண்டும்; வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உழவர் பேரியக்கம் மாநில செயலாளர் வேலுச்சாமி, சமூகநீதிக்கு எதிராக திட்டமிட்டு ஒரு சிலரால் மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார். .இதனிடையே, உள் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென வலியுறுத்தி, பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், பாமக மாநில செயலாளர் அரசாங்கம் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.