பாலக்கோடு அருகே வெறி நாய் கடித்து சிறுமிகள் உட்பட 8 பேர் மருத்துவமனையில் அனுமதி
பாலக்கோடு அருகே வெறி நாய்கள் கடித்து குதறியதில் இரண்டு சிறுமிகள் உட்பட 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேவுள்ள பஞ்சப்பள்ளியில் தெருக்களில் சுற்றி திரியும் வெறிநாய்கள் அப்பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகள் உட்பட எட்டு பேரை கடித்து குதறியது.
இது தவிர வீடுகளில் வளர்க்கபடும் ஆடு, மாடுகளையும், குறிப்பாக பால் கறக்க கூடிய கறவை மாடுகளை குறி வைத்து வெறி நாய்கள் அடுத்தடுத்து கடித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
பஞ்சப்பள்ளி பகுதியை சேர்ந்த மாதவராஜ் என்பவரின் பத்தாம் வகுப்பு படித்து வரும் மகளான நிஷா(15) அருண் என்பவரின் மகளான தாரிகா (8). இதே போல அதே ஊரை சேர்ந்த கோமதி (30) நரசிம்மன் (40) சந்திரசேகரன் (49) உட்பட எட்டு பேரை திடிரென வெறி நாய்கள் கடித்து குதறியதில் காயமடைந்தவர்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெறி நாய்களின் அட்டகாசம் தொடர்வதால், வீடுகளை விட்டு வெளியே நடமாடுவதற்கே அச்சமாக இருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ தெரியவில்லை பொதுமக்களையும், கால்நடைகளையும் கடித்து குதறி வரும் வெறி நாய்களை ஒழிக்க பஞ்சப்பள்ளி ஊராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பஞ்சப்பள்ளி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.