பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து: பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதம்
தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்கு பின்புறம், ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் என்பவர் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கி உள்ளது.
இதனை அருகே இருந்தவரகள் பார்த்து தர்மபுரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் 3 தீயணைப்பு வாகனங்களில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தீ கட்டுக் கடங்காமல் மளமளவென எரிந்தது. பின்னர், அரூர், பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கபட்டு கொளுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் போராடி அணைத்தனர்.
மேலும், தீ விபத்து நிகழ்ந்த பிளாஸ்டிக் கம்பெனி அருகில் தனியார் பேட்டரி கம்பெனி, லாரி பார்க்கிங் உள்ளிட்டவைகள் இருப்பதால் அங்கு தீ பரவாத வண்ணம் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்தில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதியமான்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீ விபத்து காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் தருமபுரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.