தர்மபுரி மாவட்ட 10 ஒன்றியங்களில் 1000 பேருக்கு கடன் வழங்க இலக்கு: கலெக்டர் தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் 1000 பேருக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டத்தில் 2021-22ஆம் ஆண்டு ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட / ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் / செம்மறியாடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஓர் ஊராட்சிக்கு 100 பயனாளிகள் வீதம் 1000 பயனாளிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள் /கணவரால் கைவிடப்பட்ட /ஆதரவற்ற பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவார்கள். இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள் நிலமற்ற வேளாண் தொழிலாளியாக இருக்க வேண்டும்.
பயனாளி அக்கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். பயனாளி 60 வயதிற்குக் கீழ் உள்ளவராக இருக்க வேண்டும். பயனாளி சொந்தமாக கறவைப் பசுக்களோ, வெள்ளாடுகள் / செம்மறியாடுகளோ வைத்திருக்கக் கூடாது.
பயனாளி மிகவும் ஏழையாகவும், அவர்கள் குடும்பத்தில் எவரும் அரசுப் பணியில் அல்லது கூட்டுறவுத்துறை மற்றும் உள்ளாட்சிப் பதவிகளில் இருக்கக் கூடாது.
இலவச கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் / செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் மற்றும் ஊரக புறக்கடை மேம்பாட்டுத் திட்டத்தின் வெள்ளாடுகள் / செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பயன் பெற்றிருக்கக் கூடாது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 30 சதவீதம் (SC-29%, ST-1%) இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதிகளுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களிலிருந்து பெற்று, உரிய சான்றுகளுடன் பூர்த்தி செய்து 9.12.2021 மாலை 5.00 மணிக்குள் கால்நடை மருந்தங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்படும் அலுவலர்கள் அடங்கிய பயனாளிகள் தேர்வுக்குழுவின் மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, தெரிவித்துள்ளார்.