தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சம்பளம் வழங்கக்கோரி ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள், மருந்தாளுநர்கள், லேப் டெக்னீசியன்கள், நுன்கதிர் பணியாளர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாகவும் புறநோயாளிகளாகவும், வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்துசெல்லும் நோயாளிகளுக்கு நேரம் காலம் பார்க்காமல் மருத்துவத்துறை ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 169 செவிலியர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள் ,உள்ளிட்ட பலருக்கு கடந்த ஒரு மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் 40 தற்காலிக செவிலியர்களுக்கு நான்கு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.
நிர்வாக அலுவலர் காந்தி, எழுத்தர் சுரேஷ், ஆகியோரின் மெத்தனப் போக்கின் காரணமாகவே இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அன்றாட வாழ்க்கையை ஓட்ட முடியாமல் மருத்துவத் துறை ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து இன்று காலை ஏழு மணிக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சம்பளம் வழங்க கேட்டு 200க்கும் மேற்பட்டோர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்தை தொடர்ந்து மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் அமுதவல்லி, செவிலியர் உள்ளிட்ட மருத்துவத்துறை ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பளம் வழங்க காலதாமதம் படுத்திய நிர்வாக அலுவலர் காந்தி மற்றும் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரண்டு மணி நேரம் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மாநில செவிலியர் சங்க துணைத்தலைவர் தேவேந்திரன் கூறும்போது, கடந்த ஒரு மாத காலமாக சம்பளம் இல்லாமல், பால் வாங்க முடியவில்லை வீட்டு வாடகை கட்ட முடியவில்லை, உணவுப் பொருட்கள் வாங்க கஷ்டப்படுகிறோம். பலமுறை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அரசு இதனை கண்டுகொள்ளவில்லை. ஆகவே எடுக்க வேண்டும் .இல்லையேல் சங்க செயற்குழுவில் கலந்து விட்டு மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இதில் செவிலியர் சங்க மாநில இணைச் செயலாளர் பன்னீர்செல்வம், செவிலியர் சங்க மாநில நிர்வாகி சரவணன், லேப் டெக்னீசியன் நிர்வாகி ரமேஷ், மருந்தாளுநர் சங்க நிர்வாகி சரவண குமார், மருத்துவத் துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் சேகர், தமிழரசன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.