சாதாரண மழைக்கே தாக்குப்பிடிக்காத பைபாஸ் ரோடு: வாகன ஓட்டிகள் பெரும்பாடு
தர்மபுரியில், சாதாரண மழைக்கே பைபாஸ் ரோடு தாக்குப்பிடிக்காமல், அப்பகுதி முழுவதும் சாக்கடைத் தண்ணீர் தேங்கி, அவதியாக உள்ளது.
HIGHLIGHTS
தர்மபுரி நகரப்பகுதியில், புதன்கிழமை இரவு சுமார் 20 நிமிடம் மழை பெய்தது. திடீர் மழையின் காரணமாக தருமபுரி தங்கம் மருத்துவமனை முதல் 4ரோடு வரை ஆங்காங்கு சாலையில் மழை நீரும் சாக்கடைத் தண்ணீரும் கலந்து தேங்கி நின்றது. மழைத்தண்ணீர் வெளியேற வழி இல்லாததால், சாலையிலேயே தேங்கி நின்ற தண்ணீரிலேயே வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி சென்றனர்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் கால்வாய்கள் மற்றும் சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவு பிறப்பித்திருந்தார். தர்மபுரி நகராட்சியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மற்றும் மழைநீர் கால்வாய்கள் முறையாக தூர்வார படாததால், தண்ணீர் செல்ல வழியின்றி சாலையில் தண்ணீர் வழிந்தோடி வருகிறது.
வழிந்தோடும் தண்ணீரில் சிலர் மேடு பள்ளம் தெரியாததால் வாகனத்தோடு சாலையில் கீழே விழும் அவலம் உண்டாகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலையில் மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்காமல் வடிகால் அமைத்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.