தர்மபுரி வெண்ணாம்பட்டியில் மத்திய அரசின் முதியோர் இல்லம் திறப்பு
தர்மபுரி வெண்ணாம்பட்டியில் மத்திய அரசின் சார்பில் முதியோர் இல்லம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
HIGHLIGHTS
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் 75 முதியோர் இல்லங்களை திறக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் மாநில அரசின் துணையுடன் 7 முதியோர் இல்லங்கள் திறக்கப்படுகிறது. இதில் தர்மபுரியில் வெண்ணாம்பட்டி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள இந்திரா நகரில் அன்னையர் ஆலயம் என்ற பெயரில் மத்திய அரசின் முதியோர் இல்லம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம், சமூகநீதி-அதிகாரமளித்தல் ஹிரிடேஜ் பவுண்டேஷன் ஆர்.ஆர்.டி.சி. மற்றும் சொசைட்டி யுப்லிப்ட் நெட்வொர்க் சமூக மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த முதியோர் இல்லம் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு தர்மபுரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எம்.கே.எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முதியோர் இல்ல நிர்வாகி எம்.இருதய அந்தோணி வரவேற்றுப் பேசினார்.
தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எம்.சிவகாந்தி முதியோர் இல்லத்தை திறந்துவைத்து அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டு உள்ள அடிப்படை வசதிகளை பார்வையிட்டார்.
விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பெண்கள் உரிமைகள் மற்றும் வளர்ச்சி நிறுவனம் நிர்வாகி என். சொக்கலிங்கம், ஒருங்கிணைப்பாளர் கே.பிரபாகரரெட்டி, அனைத்து முதியோர் இல்ல நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ஏ.புருஷோத்தமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நிறுவனப் பணியாளர்கள் சி.சூரியபிரகாஷ், எஸ்.கார்த்திக், வி.ஸ்கைலாப், எம்,சத்யா, தேவப்பிரியா, புவனேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.