கடலூர் சிறப்பு முகாமில் 130 விவசாயிகளுக்கு பட்டா பெயர் மாற்ற ஆணை
விவசாயிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர்,எம்.எல்ஏ வழங்கினார்.
HIGHLIGHTS
கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம்,கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐய்யப்பன் முன்னிலையில் விவசாயிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
செப்டம்பர் 30-ந் தேதியிலிருந்து அக்டோபர் 07-ந் தேதி வரை பட்டா மாற்றம் கோரும் மனுக்களை இணையதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ததன் அடிப்படையில் அம்மனுக்களை பரிசீலனை செய்து ஏற்பளிக்கப்பட்ட மனுக்களுக்கு இச்சிறப்பு முகாமிகளில் பட்டா மாற்றத்திற்கான ஆணை வழங்கப்படுகிறது.
இந்த முகாமில் கடலூர் 130 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணைவழங்கப்பட்டது. மேலும் அனைத்து வட்டங்களிலும் நிலுவையில் உள்ள மனுக்களில் உட்பிரிவு அல்லாத இனங்களில் 7 தினங்களுக்குள்ளும், உட்பிரிவு இனங்களில் 15 தினங்களுக்குள்ளும் ஆவணங்கள் மற்றும் விசாரணையின் அடிப்படையில் பட்டா மாற்றம் செய்து ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த முகாமில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்)ரஞ்ஜீத்சிங், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, வட்டாட்சியர் பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.