தேர்தல் பணியில் அலட்சியம் : பறக்கும் படை அதிகாரிகள் சஸ்பெண்ட்
தேர்தல் பணியில் அலட்சியமாக செயல்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பொது மக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர் ஒவ்வொரு பகுதிகளிலும் வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த சூழலில், வால்பாறை சட்டமன்ற தொகுதியில் கடந்த 19ம் தேதி பரிசு பொருட்கள் பட்டுவாடா தொடர்பாக மக்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகார் கிடைத்தும் பறக்கும்படை அதிகாரி வெள்ளியங்கிரி தலைமையிலான குழுவினர் தாமதமாக சென்றுள்ளனர்.
இந்த நிலையில் பறக்கும்படை அதிகாரி வெள்ளியங்கிரி, அவருடன் பணியில் இருந்த காவலர்கள் பிரசாத், குமாரவேல் ஆகியோர் பணியில் அலட்சியமாக இருந்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கோவை கலெக்டர் நாகராஜன் பிறப்பித்துள்ளார்.