கோவை நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்: மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்
கோவை நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
கோவை நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், முதல் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் இன்று பெண் ஒருவர் நின்றுகொண்டு இருந்தார். அப்போது, அங்கு இருந்த மர்ம நபர், அந்தப் பெண்ணின் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர்கள் பெண்ணை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மர்ம நபரை அடித்துப் பிடித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை அதிகாரிகள், ஆசிட் தாக்குதல் நடத்திய நபரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சினை காரணமாக, மனைவி கவிதா மீது கணவர் சிவக்குமார் ஆசிட் வீசியது தெரியவந்துள்ளது.
கோவையை சேர்ந்த சிவக்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக சிவக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இது தொடர்பான வழக்குகோவை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகி சாட்சி அளிக்க வந்த போது தான் கணவர் சிவக்குமார் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருக்கிறார்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீச்சு சம்பவம் நடந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி துணை ஆணையர் சந்தீப் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சம்பவ இடத்தில் முதலில் விசாரணை நடத்தினர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவிதாவிடம் வாக்குமூலம் பெற்றனர். இதனை தொடர்ந்து போலீஸ் காவலில் இருந்த சிவக்குமாரிடமும் உயர் அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தினர். பின்னர் சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.
ஆசிட் வீச்சில் கவிதாவின் உடலில் சுமார் 80 சதவீத அளவிற்கு தீக்காயம் இருப்பதால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். ஆசிட் வீச்சு சம்பவத்தை தொடர்ந்து தற்போது கோவை கோர்ட்டு வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.