மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்க போலீசார் ஆலோசனை
மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்வதைத் தடுக்க பள்ளி தலைமையாசிரியர் மற்றும் போக்குவரத்து ஊழியர்களுடன் போலீசார் ஆலோசனை செய்தனர்.
HIGHLIGHTS
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்யக் கூடாது என்றும் அவ்வாறு பயணம் செய்தால் பேருந்தின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமீபத்தில் போக்குவரத்து துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின்பேரில் புளியந்தோப்பு சரகத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களை நேரில் வரவழைத்து அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசன் மற்றும் புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் வேலு உள்ளிட்டோர் புளியந்தோப்பு சரகத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களை காவல் நிலையத்திற்கு நேரில் வரவழைத்தனர்.
அவர்களுடன் மாதவரம் மற்றும் வியாசர்பாடி போக்குவரத்து பணிமனையில் இருந்து ஊழியர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் உதவி கமிஷனர் அழகேசன் பள்ளி காலையில் தொடங்கப்படும் நேரம் மற்றும் மாலையில் பள்ளி விடும் நேரம் உள்ளிட்டவற்றை கேட்டு அந்த நேரத்தில் பேருந்துகள் எத்தனை இயக்கப்படுகின்றன என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
குறிப்பிட்ட அந்த நேரத்தில் கூடுதலாக சில பேருந்துகளை இயக்க கோரிக்கை வைத்தார் மேலும் தொடர்ந்து பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பெயரை குறிப்பெடுத்து போலீசாருக்கு தரும்படியும் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து பள்ளியின் மூலம் அவர்களுக்கு நல்வழிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது
மேலும் தொடர்ந்து பேருந்துகளில் அட்டகாசம் செய்யும் மாணவர்களை ரகசியமாக கண்காணிக்கவும் போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பிரச்சனை உள்ள இடங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் போலீசாரை குறிப்பிட்ட அந்த இடங்களில் பணியில் அமர்த்த உதவி கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார்.